பதவிக்கு என்று ஒரு மரியாதை உண்டு; வரம்பை மீறி செயல்படுகிறார் கவர்னர்.! கேரள முதல்வர் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் தன்னுடைய வரம்பை மீறி செயல்படுகிறார் என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. பல்கலைக்கழகங்களில் கேரள அரசின் நியமனங்களை கவர்னர் எதிர்ப்பதுதான் இதற்கு முக்கிய காரணமாகும். இதைத் தொடர்ந்து பல்கலைக் கழகங்களில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சமீபத்தில் கேரள சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதாவில் இதுவரை கவர்னர் ஆரிப் முகம்மது கான் கையெழுத்து போடவில்லை. பினராயி விஜயனின் உதவியாளர் ராகேஷின் மனைவி பிரியா வர்கீசுக்கு கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர் பணி நியமனம் வழங்கப்பட்டது. இது குறித்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேரடியாகவே விமர்சனம் செய்திருந்தார். பிரியா வர்கீசுக்கு இணை பேராசிரியர் பதவிக்கு தகுதி இல்லை என்றும், முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரியாமல் இந்த நியமனம் நடந்திருக்காது என்றும் கவர்னர் குற்றம்சாட்டினார். கேரள அரசை அடிக்கடி நேரடியாக விமர்சனம் செய்து வந்த கவர்னருக்கு, முதல்வர் பினராயி விஜயன் இதுவரை எந்த பதிலடியும் கொடுக்காமல் இருந்தார். சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் மட்டுமே கவர்னரை விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் கவர்னர் ஆரிப் முகம்மது கானை பினராயி விஜயன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருவனந்தபுரத்தில் நேற்று அவர் கூறியது: கவர்னர் பதவிக்கு என்று ஒரு மரியாதை உள்ளது. அந்த பதவியில் இருந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் கூறலாம் என்று கருதக்கூடாது. தன்னுடைய வரம்பை மீறி செயல்படுகிறார். என்னுடைய அலுவலக ஊழியரின் உறவினர் ஒரு தனிப்பட்ட நபர் ஆவார். அவருக்கு தகுதியான வேலைக்கு விண்ணப்பம் செய்ய உரிமை உண்டு. என்னுடைய உதவியாளரின் உறவினர் என்பதற்காக எந்த வேலைக்கும் விண்ணப்பிக்க கூடாது என்று கூற முடியுமா? அதற்கு என்னிடம் அவர்கள் அனுமதி வாங்க வேண்டிய அவசியமும் கிடையாது. தகுதி இருந்தால் அவர்களுக்கு வேலை கிடைக்கும். அவர்கள் வேலையில் சேரக்கூடாது என்று கூற கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது? அந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தார்கள்? இதற்காகத்தான் கவர்னர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துகிறாரா? வேந்தர் பதவியையும் இதற்காகத்தான் அவர் பயன்படுத்துகிறாரா? அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. சமீப காலமாகவே தேவையில்லாமல் கேரள அரசை கவர்னர் குற்றம்சாட்டி வருகிறார். அதன் மூலம் அவருக்கு ஏதாவது நல்லது நடந்தால் நடக்கட்டும் என்று கருதினோம். ஆனால் எதுவும் அவருக்கு நடந்தது போல தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கவர்னர் ஆரிப் முகமது கானை முதல்வர் பினராயி விஜயன் நேரடியாக தாக்கிப் பேசியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை