பண்ருட்டி அருகே பரபரப்பு கத்தியால் குத்தி தம்பி கொலை

பண்ருட்டி, டிச. 31: தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கிழக்கு மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் செல்வகுமார், கொத்தனார். இவரது மூத்த மகன் சதீஷ்குமார்(26). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவரது தம்பி வல்லரசு(21), இவருக்கு திருமணமாகவில்லை. அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அண்ணன், தம்பி இருவரும் அதே பகுதியில் உள்ள முந்திரி கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம்போல நேற்று வல்லரசு வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது வீட்டில் குடிபோதையில் இருந்த வல்லரசின் அண்ணன் சதீஷ்குமார், வல்லரசின் நண்பர்கள் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளார். அப்போது அதை எடுக்காதே என்று அவரது தம்பி தடுத்தார். இதனால் அண்ணன், தம்பிக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், கையில் வைத்திருந்த பேனா கத்தியால் தம்பி வல்லரசின் நெஞ்சில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த வல்லரசு, அதே இடத்தில் துடிதுடித்து சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தம்பியை கொலை செய்த அண்ணன் சதீஷ்குமாரை கைது செய்தனர். தம்பியை கத்தியால் குத்தி அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.

Related posts

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி சிப்காட் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

விக்கிரவாண்டி தொகுதியை சார்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு