கே.வி.குப்பம், மே 10: கே.வி.குப்பம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6,200 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மவட்டம், கே.வி.குப்பம் அடுத்த மாளியாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் தினகரன். இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை அதே பகுதியில் உள்ளது. இந்நிலையில், நேற்று இவரது கோழிப்பண்ணை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த தினகரன் மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கதறி அழுதபடி தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். ஆனால், அதற்குள் பண்ணை முழுவதும் தீக்கிரையானது. இதில், பண்ணையில் இருந்த 6,200 கோழிக்குஞ்சுகள் உட்பட ₹10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து கோழிப்பண்ணை உரிமையாளர் தினகரன் லத்தேரி போலீசார் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.