கும்பகோணம்: தஞ்சை சரகத்தில் கஞ்சா விற்பனை அதிக அளவில் இருப்பதாகவும், கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கஞ்சா அதிக அளவில் கடத்தப்படுவதாகவும் டிஐஜி பிரவேஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு, கடலோர பகுதிகளில் ரகசிய கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் போலீசார் கும்பகோணம் பழைய மீன் அங்காடி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர். அப்போது 2 கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் காரில் இருந்தவர்கள் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பத்ரி ராஜேந்திர பிரசாத்(23), சரவணன்(40), மகேஷ்வர்(32) மற்றும் பிரதாப் சந்த்(25) என்பதும், ஆந்திராவில் இருந்து டெல்டா மாவட்டங்களில் கஞ்சா விற்பனை செய்வதற்காக கார்களில் கும்பகோணம் பகுதிக்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து பண்டல், பண்டலாக 120 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. …