திருத்தணி, ஆக. 1: பணி ஓய்வு பெறும் நாளில் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மீது தணிக்கை தடை நிலுவையில் இருந்ததால் பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலராக கலாதரன் பணியாற்றி வந்தார். இவர் பள்ளிப்பட்டு பேரூராட்சி (கூடுதல் பொறுப்பு) செயல் அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜூலை 31ம் தேதி ஓய்வு பெறும் நாளில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார். ஆரணி, திருநின்றவூர், ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் செயல் அலுவலராக பணியாற்றிய போது தணிக்கை தடை நிலுவையில் இருந்ததால் அவர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.