கோவை, செப். 14: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் முரளி (25). இவர், கோவை போத்தனூர் சாரதா மில் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் கடை அருகே நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர் மது குடிக்க பணம் கேட்டனர். அதற்கு அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும் கத்தி முனையில் அவரை மிரட்டினர்.
இதனால் அதிர்ச்சியில் முரளி சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால், இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து முரளி அளித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் கேட்டு மிரட்டியது போத்தனூர் நூராபாத்தை சேர்ந்த தொழிலாளி நிஷாம் (33), போத்தனூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அகமத் சமீர் (32) என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.