பணமோசடி செய்த இருவர் மீது வழக்கு

கம்பம் ஜூன் 9: உத்தமபாளையம் ஆர்.சி. வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பிரதாபன். இவர் நான்கு சக்கர சரக்கு வாகனத்தை உத்தமபாளையம் அருகேயுள்ள புரோக்கர் ராஜா என்பவர் மூலம் கடந்த 2022ம் ஆண்டு கம்பத்தில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றார். அந்த கடனை 47 தவணையாக செலுத்துவதாக கூறி அதில் 7 தவணைகளை செலுத்தினார். இதற்கிடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல் நல குறைவின் காரணமாக 2 மாதங்களாக தவணை செலுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த வாகனத்தை புரோக்கர் ராஜா மூலம் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு விற்க முடிவு செய்தார். அதன்படி வாகனத்தை ரூ.66 ஆயிரத்திற்கு விலை பேசியுள்ளனர். மேலும் நிலுவையில் உள்ள தவணை தொகையை மாரிமுத்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தி கொள்ள வேண்டும் என முடிவு செய்து வாகனத்தை கிரைய ஒப்பந்தம் பதிவு செய்தனர்.

ரூ.46 ஆயிரம் கொடுத்து வாகனத்தை எடுத்து சென்றவர்கள் மீதியுள்ள 20 ஆயிரம் பணத்தையும், தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தவணை தொகையும் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக பிரதாபன் தேனி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மோசடி செய்து ஏமாற்றியதாக மாரிமுத்து, புரோக்கர் ராஜா ஆகிய 2 பேர் மீது கம்பம் தெற்கு எஸ்.ஐ கோதண்டராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்