ஊட்டி,ஏப்.2:ஊட்டி அருகே பட்பயர் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில், பெரும்பாலான வனங்களில் உள்ள சிறிய செடி,கொடிகள் மற்றும் புற்கள் ஆகியன காய்ந்து போய் உள்ளன.மேலும், கடந்த நான்கு மாதங்களாக மழையும் பெய்யாத நிலையில், அனைத்து வனங்களும் வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதனால், காட்டு தீ ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள பட்பயர் பகுதியில் உள்ள கற்பூர சோலையில் நேற்று திடீரென காட்டு தீ ஏற்பட்டது. இதில், அங்கிருந்த முட்புதர்கள் மற்றும் சிறிய செடி கொடிகள் எரிந்து நாசமானயின.
இதனை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஊட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் காட்டு தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.