செங்கம், ஜூன் 2: செங்கம் அருகே சூறாவளி காற்று பெய்த கனமழையால் பட்டுப்போன மரம் சாலையில் குறுக்கே முறிந்து விழுந்தது. அப்போது, வாகன போக்குவரத்து இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. செங்கம் அருகே குப்பநத்தம் சாலையில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலையோரம் இருந்த பட்டுப்போன புளியமரம் சாலையில் முறிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தசாமி, உதவி பொறியாளர் ப்ரீத்தி தலைமையிலான பணியாளர்கள் ஜேசிபி இயந்திர உதவியுடன் புளிய மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்து வாகனங்களை அந்த வழியாக செல்ல செய்தனர்.
மேலும் இந்த சாலையில் பட்டுப்போன புளிய மரங்கள் அதிகளவில் உள்ளது. அசம்பாவிதத்தை தவிர்க்க அதனை நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து மழைக்காலங்களுக்கு முன்னதாக அகற்றிட வேண்டுமென குடியிருப்பு வாசிகள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்த புளிய மரம் சாலை குறுக்கே விழுந்த தருணத்தில் வாகனங்கள் ஏதும் செல்லாததால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. உடனடியாக மின்சார துறையினர் மின் இணைப்பு பாதையில் மின் விநியோகம் துண்டித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.