பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் முதல் நாள் யாக சாலை பூஜை, மங்கள இசை, விநாயகர் ஹோமம், வாஸ்து சாந்தி, முளைப்பாரி தீர்த்தம் அழைத்து வருதல் நடந்தன. நேற்று இரண்டாம் கால யாக சாலையில் வருண, கோ பூஜைகள், நவக்கிரக உள்ளிட்ட 7 ஹோமங்கள், நாடி சந்தனம், பூர்ணாகுதி, வேதபாராயணம் சதுர்வேதம், தீபாராதனை நடந்தன. தொடர்ந்து புண்ணிய தீர்த்த குடங்கள் கோயில் வலம் வந்த பின், வேதமந்திரங்கள் முழங்க ராஜகோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் தங்கராஜ், சுந்தரம், பொன்ராஜ், ராமராஜ், கர்ணன், வேல்முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.