பட்டா, சாதி சான்றிதழ்கள் தாமதமின்றி தரப்படுகிறதா? கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு: பொதுமக்களிடம் நேரில் கேட்டறிந்தார்

சென்னை: கிண்டியில் உள்ள வட்டாட்சியர்  அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தேவையான பட்டா, சாதி சான்றிதழ்கள் தாமதமின்றி தரப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், முதல்வர் நேற்று சென்னை, கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பட்டா, சாதி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற  வருவாய் துறையின் சேவைகளை பெற வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இ-சேவை மையத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் எவ்வளவு நாட்களில் தீர்க்கப்படுகிறது போன்ற விவரங்கள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம்  கேட்டறிந்தார். பின்னர், வட்டாட்சியர் அலுவலக வருகை பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை ஆய்வு செய்த முதல்வர் வட்டாட்சியரிடம், வருகை தந்துள்ள அதிகாரிகள், பணியாளர்கள் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, சேவைகள் பெற வந்திருந்த பொதுமக்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்கள் பெற வந்துள்ள சேவைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வருவாய்த்துறை என்பது நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்குவது, பொதுமக்களின் தேவைகளான பல்வேறு வகையான அடிப்படையான சான்றிதழ்களை வழங்குதல், முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற கைம்பெண்கள், ஏழை விவசாய தொழிலாளர்கள், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு ஓய்வூதியம் வழங்குதல், குடும்ப அட்டை வழங்குதல், விபத்து நிவாரணம் வழங்குதல் போன்ற முக்கியமான சேவைகள் வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக வழங்கப்படுகிறது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஆய்வு செய்த முதல்வர், பொதுமக்களை எக்காரணம் கொண்டும் அலைக்கழிக்க கூடாது என்றும், அவர்களுக்கு உரிய சேவைகளை விரைவாக வழங்கிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முதலமைச்சரின் தனி பிரிவில் இருந்து வந்துள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். அரசின் முக்கியமான துறையாக விளங்கும் இதன் சேவை, மக்களுக்கு மிகவும் இன்றியமையாதது. எனவே, பொதுமக்கள் குறிப்பாக மாணவர்களின் கல்விக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் பிற அரசு சேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் எந்தவித தொய்வுமின்றி வழங்கிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இணை ஆணையர் (நில நிர்வாகம்) பார்த்திபன், வட்டாட்சியர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்