Friday, July 5, 2024
Home » பட்டா கத்தியை காட்டி மிரட்டி செல்போன் கடையில் துணிகர கொள்ளை: 4 பேர் சுற்றி வளைத்து கைது

பட்டா கத்தியை காட்டி மிரட்டி செல்போன் கடையில் துணிகர கொள்ளை: 4 பேர் சுற்றி வளைத்து கைது

by kannappan

திருப்போரூர்: கேளம்பாக்கம் பகுதியில் பட்டா கத்தியை காட்டி செல்போன் கடையில் கொள்ளையடித்த 4 பேரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.  கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் போலோராம் (39). கோவளம் செல்லும் சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடையில் 2 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். கடந்த 7ம் தேதி இரவு போலோராம், ஊழியர்களுடன் கடையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள், செல்போன் வாங்க வந்திருப்பதாக கூறி, மாடல்களை கேட்டனர். இதையடுத்து கடை ஊழியர்கள் 2 செல்போன்களை எடுத்துக் காட்டினர். 2 பேர் செல்போன்களை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் நின்றிருந்த 2 பேர், மறைத்து வைத்திருந்த 2 பட்டா கத்திகளை எடுத்து, கடையில் இருந்த அனைவரையும் உள்ளே செல்லும்படி மிரட்டினர். பின்னர், அங்கிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள்,  கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ரூ.59 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். புகாரின்படி கேளம்பாக்கம்  இன்ஸ்பெக்டர் மணிமாறன், எஸ்ஐ ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, 3 தனிப்படை அமைத்து விசாரித்தனர். அதில், பொன்னேரியை சேர்ந்த ஜெகா (எ) ஜெகதீஷ் (22), ரஞ்சித்குமார் (24), ஜெயப்பிரகாஷ்  (எ) சூர்யா (24), மணலி புதுநகர், சுப்ரமணியன் நகர் விக்கி (எ) விக்னேஷ் (24) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர்ந்து போலீசார், 4 பேரையும் நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 18 செல்போன்கள், 4 பைக், 1 பட்டாக்கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஜெகதீஷ், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பிஇ பட்டதாரிகள். ரஞ்சித், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கடந்தாண்டு பொன்னேரியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், மாமல்லபுரம், செங்கல்பட்டு ஆகிய உட்கோட்ட காவல் எல்லைகளில் தொடர்ந்து நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை உள்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என அனைத்து சரக போலீசாருக்கும் எஸ்பி விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்படி, ஏஎஸ்பி ஆதர்ஷ் பெச்சாரே மேற்பார்வையில் தனிப்படை அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், செங்கல்பட்டு அருகே மலை பூங்கா பகுதியில் நேற்று காலை தனிப்படை போலீசார், ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஒரு வாலிபர், சந்தேகப்படும்படி சுற்றி வந்தார். அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் போலீசார், அவரை காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர்.அதில், மலையம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (29) என தெரிந்தது. மேலும் விசாரணையில் மறைமலைநகர் ரயில் நகர், திருக்கழுக்குன்றம் கொள்ளிமேடு, செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவரிடம் இருந்து 38 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேஷை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில், சிறப்பாக செயல்பட்ட தனிப்படை சிறப்பு எஸ்ஐ குமார், ஏட்டுகள் ராஜி, முனியன், சரவணன் ஆகியோரை எஸ்பி விஜயகுமார் பாராட்டினார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் நடந்தால் 7200102104 என்ற எண்ணிலோ, குருந்தகவல் மற்றும் வாட்சப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். அதன்பேரில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்….

You may also like

Leave a Comment

five × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi