உசிலம்பட்டி, ஜூலை 13: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த விழாவிற்காக கடந்த 5ஆம் தேதி பட்டாசு வெடித்ததில் ஆட்டோவில் பயணித்து வந்த வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த முத்தையா 60 என்ற முதியவர் கண்ணில் பட்டாசு துகள் பட்டு படுகாயமடைந்தார். முத்தையாவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் காயம்பட்ட கண்ணுக்கு செல்லும் நரம்புகள் செயலிழந்துள்ளதால் கண் தெரிய வாய்ப்பில்லை என மருத்துவ குழுவினர் அறிவிப்பு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் மண்டப உரிமையாளர் எண்ணாயிரம், இல்ல விழா நடத்திய மானுத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், பட்டாசு வெடித்த முத்து என்ற மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு வெடிப்பினால் கண் பார்வை இழந்த முதியவர் முத்தையா தனது உறவினர்களுடன், உசிலம்பட்டி நகர் பகுதியில் பட்டாசு வெடிக்க தடை இருந்தும் தடையை மீறி வெடி வடித்த வழக்கு பதிவு செய்யப்பட்ட மூவரையும் கைது செய்ய கோரி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.