திருக்கோவிலூர், ஜூன் 24: திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட நெடுங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (52). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை சுமார் 8 மணியளவில் அவர் வயலுக்கு சென்றுள்ளார். அவரது மனைவி பெட்டிசியா ஞாயிற்றுக்கிழமை என்பதால் அருகில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுள்ளார். பின்னர், வயலில் இருந்து வந்த செல்வராஜ் தேவாலயத்துக்கு சென்ற மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5.5 பவுன் தங்க நகைகள், ரூ.8,500 ரொக்கப்பணம் மற்றும் செல்போன் ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வராஜ் மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.