புதுச்சேரி, ஏப். 12: புதுவையில் பிறந்தநாள் பார்ட்டி கும்பலால் ஏற்பட்ட விபத்தில் பட்டதாரி வாலிபர் பலியான வழக்கில் மேலும் ஒருவர் ஒதியஞ்சாலை போலீசில் சரணடைந்துள்ளார். புதுச்சேரி முத்துபிள்ளைபாளையம், ராதாநகர், 3வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் விஷால் (29). கடந்த 7ம்தேதி இரவு லபோர்த் தானே வீதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது போதை கும்பலில் இருந்த ஒருவர் விஷாலின் தலையில் தட்டியுள்ளார். இதில் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி உயிரிழந்தார். இவ்வழக்கில் நவீன்குமார் (24), கார்த்திக் சங்கர் (40), சூர்யகுமார் (33), அருண்தாமஸ் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஈஸ்வரன் கோயில் வீதியை சேர்ந்த போட்டோ கிராபர் முகேஷ் (33) மற்றும் கார்த்திக் சங்கரின் மனைவி மோனிஷா (34) ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே தேடப்பட்டு வந்த முகேஷ், நேற்று மதியம் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார், அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மோனிஷா, புதுச்சேரி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
பட்டதாரி வாலிபர் பலியான வழக்கு போட்டோகிராபர் போலீசில் சரண்
previous post