ஊட்டி, ஜூலை 31: ஊட்டி படகு இல்லம் சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஊட்டி மத்திய பஸ் நிலையம் பின்புறம் ஊட்டி ஏரி அமைந்துள்ளது. ஊட்டி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இங்கு படகு சவாரி செய்யாமல் செல்வதில்லை. படகு இல்லத்திற்கு செல்ல பஸ் நிலைய பகுதியில் இருந்து சாலை உள்ளது.
இச்சாலை வழியாக படகு இல்லம் மட்டுமின்றி காந்தல், பிங்கர்போஸ்ட் சென்று அங்கிருந்து கூடலூர் செல்ல முடியும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில், ரயில்வே காவல் நிலையம் அருகே சாலையின் நடுவே பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளம் இருப்பது தெரியாமல் வேகமாக வரும் வாகனங்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடையும் சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன.
பள்ளத்தில் இறங்காமல் செல்வதற்காக இடதுபுறமாக வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள இப்பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.