சண்டிகர்: பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் மான் அறிவித்துள்ளார். பஞ்சாபில் அமலில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்படி அரசை வலியுறுத்தி வருகின்றனர். இம்மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தனது கட்சி வெற்றி பெற்றால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்தது. அதன்படி, வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் பகவந்த் சிங் மான் கூறுகையில், ‘‘அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்பெறுவார்கள்,’’ என்றார். …