Monday, July 1, 2024
Home » பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் 94,000 மரக்கன்றுகள் தயார்

பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் 94,000 மரக்கன்றுகள் தயார்

by Karthik Yash

கிருஷ்ணகிரி, ஜூன் 22: கிருஷ்ணகிரி அடுத்த பைனப்பள்ளி மத்திய நாற்றங்கால் பண்ணையில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், இலவசமாக வழங்க 94,000 மரக்கன்றுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.7 சதவிகிதத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கோடு, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி துவக்கி வைத்தார். அடுத்த 10 ஆண்டு காலத்தில் நகர்ப்புற பகுதிகள், விவசாயப் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள், ஏரிக்கரைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆற்று படுகைகள், பிற பொது நிலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் மர வகைகள் நடப்படும். இந்த இயக்கத்தின் கீழ், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்ரக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி, வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர், விவசாயிகள், கிராம மக்கள் போன்ற உள்ளூர் சமுகங்களின் வருமானத்தை பெருக்கவும் இந்த திட்டம் உதவும்.

பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்காக, பல்வேறு மாவட்டங்களில் வனத்துறை, வேளாண்மை நலத்துறை, ஊரக வளர்ச்சி துறை, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நாற்றங்கால்கள் போன்றவற்றின் மூலமாக 2.80 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சமூக காடுகள் மற்றும் விரிவாக்க சரகத்திற்குட்பட்ட பையனப்பள்ளியில், மத்திய நாற்றங்கால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு தேக்கு, ஈட்டி, சிவப்பு சந்தனம், சில்வர் ஓக், மகாகனி, ஜம்பு நாவல், நாட்டு நாவல், வேங்கை, இலுப்பை, நீர்மத்தி, பூவரசன், வேப்பன், புங்கன், ஜக்ரண்டா, ஆயா, டோலிசந்தர், புளியன், பாக்கு, சவுக்கு போன்ற மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, நடவு செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது.

இது குறித்து பையனப்பள்ளி மத்திய நாற்றங்கால் வனச்சரக அலுவலர் குமரவேல் கூறியதாவது: பையனப்பள்ளி மத்திய நாற்றங்கால் பண்ணையில், தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், 64 ஆயிரம் மரக்கன்றுகளும், முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 30 ஆயிரம் மரக்கன்றுகளும் என மொத்தம் 94 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. இதனை அரசு மற்றும் தனியார் நிறுவன வளாகங்கள், விவசாய நிலங்களில் நடவு செய்யலாம். விவசாயிகள் மரக்கன்றுகளை ஊடுபயிராகவோ, தொகுப்பாகவோ, வளர்ப்பு நடவாகவோ நடவு செய்து பயன்பெறலாம். போதுமான தண்ணீர் மற்றும் பாதுகாப்பு வேலி உள்ளிட்ட வசதிகள் உள்ள நிலங்களில், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உரிய ஆவணங்களை வழங்கி, தங்களது மண் தன்மைக்கு ஏற்ப தேவையான மரக்கன்றுகள் விவரங்கள் தெரிவித்தால், வனத்துறை மூலம் இலவசமாக நடவு செய்து தரப்படும்.நடவு செய்யப்பட்ட மரம் வளர்ப்பினால் கிடைக்கப்பெறும் வருவாயை, முழுமையாக அனுபவிக்கக்கூடிய உரிமை, நில உரிமையாளர்களுக்கு உள்ளது. மேலும், இந்த மரம் வளர்ப்பின் நிதி பலனில் அரசுக்கு பங்கு ஏதும் செலுத்த தேவையில்லை. இலவசமாக மரக்கன்றுகள் வேண்டுவோர் 9442818363 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

1 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi