பசுமையாக காட்சியளிக்கும் முதுமலை சாலைகளில் விலங்குகள் உலா

ஊட்டி :  முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் பசுமை திரும்பியுள்ளதால், விலங்குகள் சாலையோரங்களில் வலம் வருகின்றன. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கீ.மீ., பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. அண்மையில் இந்த புலிகள் காப்பகம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு புலிகள் மட்டுமின்றி காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடி, காட்டு எருமைகள், பல்வேறு வகையான மான்கள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இது தவிர இந்த சரணாலயத்தில் விலை உயர்ந்த தேக்கு மற்றும் ஈட்டி மரங்கள் அதிகளவு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த புலிகள் காப்பகம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் எல்லையில் அமைந்துள்ளது. இந்த முதுமலை புலிகள் காப்பகம் வழியாக தொரப்பள்ளி – கக்கநல்லா சாலை மற்றும் மசினகுடி – தெப்பகாடு ஆகிய இரு சாலைகள் செல்கின்றன. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இங்குள்ள தெப்பகாட்டில் இருந்து வாகன சவாரியும் உள்ளது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வனத்திற்குள் சென்று யானை உள்ளிட்ட வன விலங்குகளை பார்த்து மகிழ்கின்றனர். இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக பெய்த தொடர் மழை பெய்தது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவு பெய்தது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் மற்றும் சிறிய மரங்களும் பசுமை திரும்பியது. இங்குள்ள நீரோடைகள், குளங்கள் மற்றும் குட்டைகள் நிரம்பின. வனங்களிலும் பசுமை திரும்பியுள்ளதால், கரடி, மான், யானை போன்ற வன விலங்குகள் சாலையோரங்களில் உலா வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். வன விலங்குகள் சாலையோரம் உலா வரும் நிலையில் அவற்றை தொந்தரவு செய்ய வேண்டாம் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்