க.பரமத்தி,மார்ச் 22: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர். க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட புன்னத்தில் புன்னைவன நாதர் இக்கோயிலில் உள்ள சண்முகநாதர், பரமத்தி முன்னூர் சாலையில் உள்ள காவடி காத்த முருகன், காருடையாம்பாளையம் கருங்கரடு பழனியாண்டவர், முன்னூர் கல்யாண மரகதீஸ்வரர் கோவிலில் உள்ள உத்தண்டவேலாயுதசுவாமி ஆகிய கோவில்கள் உள்ளன.
இங்கு முக்கிய விரத நாள்களில் பால், பன்னீர் இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு செய்யபட்டு வருகிறது. வரும் 24ம்தேதி ஞாயிறுக்கிழமை அன்று பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது.
தொடர்ந்து பங்கேற்கும் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனவே அன்னதானத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் அபிஷேகத்திற்கு தேவைப்படும் பால், தயிர், இளநீர் வழங்க விருப்பமுள்ளவர்கள் 24ம்தேதி காலை 8மணிக்குள் கோயிலில் வழங்கலாம் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.