வத்திராயிருப்பு: பங்குனி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு கடந்த 9ம் தேதி முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மூன்றாம் நாளான நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கொரோனா விதிமுறை காரணமாக காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர். எனவே பகல் 1 மணி வரை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். விழாவை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சாமிக்கு நேற்று பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தாணிப்பாறை அடிவாரத்தில் பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நான்காம் நாளான இன்றுவரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்க சுவாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்….