சிவகாசி: விருதுநகர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் கடும் வெயிலால் பிரச்சாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.தமிழகம் முழுவதும் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. முக்கிய கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, இ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.தற்போது வேட்பாளர்கள் கிராமங்கள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் 18 நாட்களே இருக்கும் நிலையில் கடுமையாக சுட்டெரிக்கும் வெயிலால் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை கடுமையான வெயில் இருப்பதால் இந்த நேரத்தில் பிரச்சாரம் செய்வது வேட்பாளர்களுக்கு சவாலாக உள்ளது. பகல் நேரத்தில் அடிக்கும் வெயிலால் வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் கட்சியினர், பொதுமக்கள் குறைவாகவே காணப்படுகின்றனர். எந்த கிராமத்தையும் விட்டு விடாமல் அனைத்து கிராமங்களுக்கும் வேட்பாளர்கள் வர வேண்டும் என எதிர்பார்ப்பு இருப்பதால் கடும் வெயிலுக்கு மத்தியிலும் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கட்சியினர் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் அதிகமான கிராமங்களை கொண்டதாகும். கடும் வெயில் அடித்தாலும் வேறு வழியின்றி பிரசாரத்திற்கு சென்றால் பெரும்பாலான கிராமங்களில் மக்கள் குறைவாகவே உள்ளனர். வெயிலால் பிரசாரத்திற்கு செல்வதும் கடினமாக உள்ளது. இதனால் கடும் வெயில் நேரத்தை தவிர்க்க தொடங்கியுள்ளோம். மற்ற நேரங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் குறைவான நேரம் மட்டுமே ஒதுக்கி பிரசாரம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்….