திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோட்டத்தில் பி.பி.ஆர் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் மன்னார்குடி கோட்டத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளுக்கான தடுப்பூசி முகாம் கடந்த 14ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.இந்த பணியில் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழுக்கள் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நோய் வைரஸ் கிருமி ஒன்றால் ஏற்படும். பிபிஆர் நோயானது ஆடுகளில் அதிக தொற்றினை ஏற்படுத்தி அதிக பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். 3 முதல் 5 நாட்கள் வரை மூக்கில் இருந்து நீர் வடியும், வாயின் உட்புறங்களில் நாக்கில், ஈறுகளில் புண் ஏற்பட்டு உமிழ்நீர் வடியும், கழிச்சல் இருக்கும், சோர்ந்து போகும் உணவு உட்கொள்ளாது இருமல் மற்றும் சளி கணப்படும்,இந்த நோய் பாதித்த ஆடுகளில் இருந்து வெளியேறும் சளியில் கிருமி மற்றும் உமிழ்நீர் மூலமாக மற்ற ஆடுகளுக்கு பரவி, நோய் தொற்றினை ஏற்படுத்தும். இந்நோய் பாதித்த ஆடுகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் 70 சதவீதம் இறப்பை ஏற்படுத்தும். பி.பி.ஆர் தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பாக 3 முதல் 6வரை உள்ள குட்டிகளுக்கு கண்டிப்பாக போட வேண்டும்.கால்நடை சுகாதாரம் 2010-21 கீழ் நமது கோட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் சம்பந்தபட்ட கிராமங்களில் கடந்த 14-ல் தொடங்கி வரும் 31ம் தேதி வரை சம்மந்தப்பட்ட மருந்தக தடுப்பூசி குழுக்கள் மூலம் கிராமங்கள் தோறும் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை கால்நடை வளர்ப்போர் குழுக்கள் பயன்படுத்தி, கால்நடை கிராமங்களுக்கு தடுப்பூசி போடும் குழுக்கள் வரும்போது தவறாமல் தங்கள் ஆடுகளுக்கு பிபிஆர் தடுப்பூசி போட்டு பாதுகாத்து கொள்ளவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….