வேலூர், ஜூலை 11: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்லும் வகையில் புதிய பேட்டரி வாகனம் இயக்கப்பட்டு வருகிறது. வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்து செல்கின்றனர். தினந்தோறும் புறநோயாளிகள் மாத்திரைகள், மருந்துகள் வங்காவும், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் வயதானவர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அவர்களால் நடந்து செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வீல்சேர் இருந்தாலும் அதில் அழைத்து செல்ல மருத்துவமனை ஊழியர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றது. இதனால் நோயாளிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.
இந்நிலையில் நோயாளிகளில் அவல நிலையை தடுக்கும் வகையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் நோயாளிகள் அமர்ந்து செல்வதோடு, உட்கார முடியாத நோயாளிகளை அழைத்துச் செல்ல படுக்கையும் உள்ளது. சத்தம் இல்லாமல் செல்லும் இந்த பேட்டரி வாகனம் மூலம் நோயாளிகள், புற நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கும் மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விடப்படுகிறது. பொதுமக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் நோயாளிகளின் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.