Wednesday, July 3, 2024
Home » நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்

நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்

by kannappan

சென்னை: நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.  தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். இதற்காக, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையால் சென்னையில் வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். மாலை 3.55 மணி அளவில் ஐதராபாத்தில் இருந்து இந்திய விமான படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் சென்னை வந்தார். 5.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ‘ஐஎன்எஸ் அடையாறு’ என்ற கடலோர காவல் படைக்குச் சொந்தமான இறங்கு தளத்தில் இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் நேரு உள் விளையாட்டரங்கம் செல்கிறார். அங்கு பிரமாண்டமாக நடைபெறும் விழாவில், ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து சிறப்புரையாற்றுகிறார்.  சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். அதன்படி, சென்னையில் ரூ.29,000 கோடி மதிப்பிலான 5  திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். அதன்படி, சென்னை  தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 30 கி.மீ தொலைவுக்கு ரூ.590 கோடி  மதிப்பில் 3-வது ரயில்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இதன்மூலம்  புறநகர் ரயில் சேவை அதிகரித்து, பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும்.  சுமார் ரூ. 850 கோடி மற்றும் 910 கோடி ரூபாய் மதிப்பில்  நிறைவேற்றப்பட்டுள்ள 115 கிமீ நீளமுள்ள எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவு  மற்றும் 271 கிமீ நீளமுள்ள திருவள்ளூர்-பெங்களூரு பிரிவான இயற்கை எரிவாயு  குழாய் திட்டங்கள், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள  நுகர்வோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் இயற்கை எரிவாயு விநியோகத்தை  எளிதாக்கும். அதேபோன்று, 75 கி.மீ  தொலைவுள்ள ரூ.500 கோடி  மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை-தேனி இடையேயான  (அகல ரயில் பாதையாக  மாற்றும் திட்டம்) ரயில் தடத்தை நாட்டுக்கு  அர்ப்பணித்து வைக்கிறார். இந்த  திட்டம் இந்தப் பகுதிகளில் உள்ள சுற்றுலா  வளர்ச்சியை மேம்படுத்த  வழிவகுக்கும். இதேபோன்று பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ்,  குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116  கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகள் இந்த நிகழ்ச்சியில்  துவக்கி வைக்கப்படுகின்றன. ரூ.28,500 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள 6  திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதில் 262 கிலோமீட்டர் தூர  பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை ரூ.14,870 கோடி செலவில்  உருவாக்கப்படவுள்ளது. கர்நாடகா-ஆந்திரா-தமிழ்நாடு வழியாக செல்லும்  இந்த சாலை பெங்களூருக்கும், சென்னைக்கும் இடையிலான பயண நேரத்தை 2 முதல் 3  மணி நேரம் குறைக்கும். சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும்  (என்எச்-4), 21 கி.மீ. தூர ஈரடுக்கு, நான்குவழி உயர்மட்டச்சாலை, ரூ.5850  கோடி செலவில் கட்டப்படும். இந்த திட்டத்தின் மூலம், சென்னை துறைமுகத்துக்கு சரக்கு வாகனங்கள்  24 மணி நேரமும் தங்கு தடையின்றி சென்றுவர முடியும்.நெரலூரு-தர்மபுரி பிரிவில்  (என்.எச்-844) 94 கி.மீ. தூரத்துக்கு 4 வழிச்சாலை, மீன்சுருட்டி-சிதம்பரம்  பிரிவில் (என்எச்-227) 31 கி.மீ. இருவழிச்சாலை ஆகியவை முறையே ரூ.3870 கோடி  மற்றும் ரூ.720 கோடியில் அமைக்கப்படவுள்ளது. இது அந்தந்தப் பகுதிகளில்  தடையற்ற போக்குவரத்திற்கு பெரிதும் உதவும். இந்த நிகழ்ச்சியில் சென்னை  எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்படும். இந்த திட்டம் ரூ.1800 கோடி செலவில் முடிக்கப்படும். இந்த  ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படுவதுடன், பயணிகளுக்கான வசதியும் மேம்படுத்தும்  நோக்கத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. ரூ.1,400 கோடி மதிப்பில்  சென்னையில் உருவாக்கப்பட உள்ள பல்முனை சரக்கு போக்குவரத்து  பூங்காவுக்கும் பிரதமர் இன்று அடிக்கல் நாட்டுகிறார். இது தடையற்ற  சரக்கு போக்குவரத்துக்கு வழிவகுப்பதுடன், பல்வேறு  செயல்பாடுகளுக்கும் உதவும். விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலை வகிக்கிறார். ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஒன்றிய ரயில்வே தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, ஒன்றிய இணை அமைச்சர்கள் வி.கே.சிங், எல்.முருகன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி, இன்று சென்னை வருவதையொட்டி வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் பயணம் செய்யும் பாதையில் பயணம் செய்யும், வாகன ஓட்டிகள் மாற்று வழியாக செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புபிரதமரின் தமிழக வருகையை முன்னிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் 5 கூடுதல் கமிஷனர்கள், 8 இணை கமிஷனர்கள், 29 துணை கமிஷனர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என மொத்தம் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் பிரதமர் வரும் அடையார் ஐஎன்எஸ் மைதானம் வரை சாலை நெடுகிலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிரதமர் இரவு 7.05 மணிக்கு கார் மூலம் சாலை மார்க்கமாக புறப்பட்டு அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு வந்து, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் 7.35 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்கிறார். 7.40 மணிக்கு இந்திய விமான படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். இன்று இரவு 10.25 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை பிரதமர் மோடி சென்றடைவார்….

You may also like

Leave a Comment

16 + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi