நெல் பயிரை தாக்கும் நெற்பழநோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்-வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் விளக்கம்

நீடாமங்கலம் : நெல் பயிரை தாக்கும் நெற்பழநோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீ நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது சம்பா மற்றும் தாளடி பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல்லை தாக்கக்கூடிய நெற்பழ நோய் ஆங்காங்கே தென்பட ஆரம்பித்து உள்ளது. இந்த நோயானது விதை, காற்று, மண் மற்றும் நீர் மூலம் பரவக் கூடியது. பூஞ்சாண வித்துக்கள் ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு எளிதாக பரவிவிடும். மேலும் இதற்கு சாதகமான சூழ்நிலைகள் ஆன காற்றின் ஈரப்பதம் 90 சதவீதத்திற்கு மேல் இருப்பது, குறைந்த வெப்பநிலை, இரவு நேர பனிப்பொழிவு இந்த நோய் வருவதற்கு ஏதுவாக இருக்கும். பூக்கும் பருவத்தில் இந்த அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். தாக்கப்பட்ட கதிர்கள் முதலில் பச்சை நிற பூஞ்சாணத்தினால் மூடப்பட்டு நாளடைவில் இரண்டு அல்லது மூன்று சென்டிமீட்டர் வரை பூஞ்சாணம் வளர்ந்து மஞ்சள் நிறமாக மாறி, பிறகு உடைந்து காற்றின் மூலம் பரவி அடுத்த நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தாக்கப்பட்ட மணிகளின் தரம் குறைவதோடு மட்டுமல்லாமல் மணிகள் பதராகிவிடும். இதனால் மலட்டுத்தன்மை ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் நெல் மணிகளில் உள்ள புரதச்சத்தினை உட்கொண்டு இந்த பூஞ்சாணம் வளர்ந்து பருமனாக தென்படும்.கட்டுப்படுத்தும் முறைகள்: விவசாயிகள் அளவுக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதை தவிர்த்து பரிந்துரைக்கப்பட்ட அளவையே உபயோகப்படுத்த வேண்டும். விதையை தேர்வு செய்யும்போது தரமான விதையை தேர்வு செய்ய வேண்டும். புரப்பிகோனசோல் 25 இசி என்ற பூஞ்சாணக் கொல்லியை ஒரு ஏக்கருக்கு 200 மில்லி அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 77 டபள்யூ.பி 500 கிராம் பூஞ்சாணக் கொல்லியை கதிர்தாள் உருவாகும் பருவம் ஒரு முறையும், 50 சத பூக்கள் உருவாகும் தருணத்தில் ஒரு முறையும் தெளித்தால் இந்த நோயை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்….

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்