நெல்லை : நெல்லை மாநகராட்சி வாக்குகள் எண்ணப்பட்ட அரசு பொறியியல் கல்லூரி சாலை எதிரே நேற்று திருவிழா கூட்டம் காணப்பட்டது. வாக்குகள் எண்ணப்பட்டதை ஒட்டி நேற்று காலை முதல் இரவு வரை நெல்லை- நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இவ்வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.இதையொட்டி வார்டுகளில் போட்டியிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள், ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அருகே திரண்டனர். பொறியியல் கல்லூரி முன்பு ரெட்டியார்பட்டிக்கு சாலை பிரியும் இடத்தில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு பார்க்கிங் ஏரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் மட்டும் அரசு பொறியியல் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பொறியியல் கல்லூரியில் ஒரு இடத்தில் அமர வைக்கப்பட்டு 4 மண்டலங்களிலும் வாக்கு எண்ணப்படும் வார்டுகளுக்குரிய முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அரசு பொறியியல் கல்லூரி அருகே அரசியல் கட்சியினரும், முகவர்களும் திரண்டதால் அங்கு திருவிழா கூட்டம் போல் காணப்பட்டது. அரசு பொறியியல் கல்லூரி அமைந்துள்ள பாளை திருவனந்தபுரம் சாலையில் வாகனங்களும் தொடர்ச்சியாக அணிவகுத்த வண்ணம் நின்றன. மேலும் டிபன் மற்றும் கேன் டீ உள்ளிட்ட சிறு வியாபாரிகளும் தங்கள் வணிகத்தை நடத்தினர்.நெல்லை அரசு பொறியியல் கல்லூரி சாலையில் கூட்டம் அதிகரித்ததையடுத்து நேற்று அச்சாலை மூடப்பட்டது. நாகர்கோவில் செல்லும் பஸ்கள் ரெட்டியார்பட்டி பைபாஸ் வழியாகவும், நாகர்கோவிலில் இருந்து வரும் பஸ்கள் மேலப்பாளையம் வழியாகவும் திருப்பி விடப்பட்டன. இரவு 8 மணிக்கு பின்னரே அச்சாலையில் போக்குவரத்து இயல்பானது.சங்கர்நகர், நாராணம்மாள்புரம் பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் போலீஸ் கமிஷனர் துரைக்குமார், துணை கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்….