நெல்லை : நெல்லை டவுன் பாட்டப்பத்து பகுதியில் துவைக்க வைத்திருந்த 800 சேலைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. மேலும் அருகே இருந்த மின்மோட்டாரும் திருடுபோனது. நெல்லை டவுன் பாட்டப்பத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (47). சலவை தொழிலாளியான இவர், பாட்டப்பத்து நபிகள் நாயகம் தெருவில் உள்ள பலவேசக்காரன் கோயில் வளாகத்தில் துணிமணிகளுக்கான மூட்டைகளை அடுக்கிவைத்து சலவை செய்து பின்னர் கடைக்காரர்களிடம் ஒப்படைப்பது வழக்கம். இதே போல் சம்பவத்தன்று இரவு சேலைகள் உள்ளிட்ட துணிமூட்டைகளை கடையில் அடுக்கிவைத்து விட்டு வீட்டுக்குச் சென்றார். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், சேலை மூட்டைகள் மீது தீ வைத்து சென்றனர். இதில் சுமார் 800 சேலைகள் தீயில் எரிந்து நாசமாகின. அத்துடன் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (50) என்பவருக்கு சொந்தமான 3 சேலை பொட்டலங்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.90 ஆயிரம் ஆகும். மேலும் அங்கு சேலைகளை தொட்டியில் ஊற வைப்பதற்காகப் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாரையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த டவுன் போலீசார், மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்….