Saturday, July 6, 2024
Home » நெல்லை கூடங்குளத்தில் மேலும் 2 அணுஉலைகள் அமைக்க ஒப்பந்தம்

நெல்லை கூடங்குளத்தில் மேலும் 2 அணுஉலைகள் அமைக்க ஒப்பந்தம்

by kannappan

நெல்லை: நெல்லை கூடங்குளத்தில் மேலும் 2 அணுஉலைகள் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் 5 மற்றும் 6வது அணு உலைகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் எல் அண்ட் டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. அணு உலை கட்டடம், அணு உலை துணைக்கட்டடம், சுழலி கட்டடம். டீசல் ஜெனரேட்டர் அறை கட்ட ஒப்பந்தம் கையெப்பமிடப்பட்டுள்ளது. 64 மாதங்களில் பணிகளை முடிக்குமாறு எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. 2 அணு உலைகளும் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்டதாக அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அணு உலையை எல் அண்ட் டி நிறுவனம் கட்டி வருகிறது.பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் பேசுகையில், ஒட்டுமொத்தமாக தமிழகத்தையும், தென் இந்தியாவையும் ஒரு மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய் சிக்க வைப்பதற்கான வேலையை மத்தியில் இருக்கக்கூடிய அரசுகள் செய்து வருகின்றன. ஏற்கனவே கூடங்குளத்தில் இருக்கக்கூடிய நிறுவப்பட்டுள்ள 1 மற்றும் 2வது அணுஉலைகள் இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்ட முறைகள் பழுதடைந்த நின்ற பிறகும் அரசு இந்த முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று அரசு சொல்கிறது. இந்தியா மின்மிகை நாடு என்று அரசு சொல்கிறது. இதன்பிறகு எதற்காக இவ்வளவு பெரிய திட்டங்களை குறிப்பாக அணுமின் திட்டங்களை நாங்கள் குஜராத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் அறிவித்த பிறகும் தமிழகத்தில் ஒரே இடத்தில் 6 உலைகளை வைக்கவேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் துச்சமென மதிக்கும் செயலாக காட்டுகிறது என்று சுந்தரராஜன் கூறியுள்ளார்.இதுகுறித்து அணுஉலை எதிர்ப்பாளர் சுப.உதயக்குமார், நிச்சயமாக இது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று. ஏற்கனவே ஒரே இடத்தில் அதிகமான அணு உலைகளை கட்ட கூடாது. இந்தியாவில் மிகப்பெரிய அணு உலை வழக்கமான கூடங்குளம் உருவெடுத்திருக்கிறது. இந்த நிலையில் இன்னும் அதிகமாக 2 அணுஉலைகளை எல் அண்ட் டி நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது தமிழ் இனத்திற்கும், இந்தியாவிற்கும் செய்ய கூடிய மிகப்பெரிய துரோகம். ஏற்கனவே 1 மற்றும் 2 அணு உலைகள் ஒழுங்காக வேலை செய்யாமல் இருக்கும் போது அணு கட்டுமான அனுபவம் இல்லாத ஒரு புதிய நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்து தமிழர்கள் உயிர்களோடு விளையாடுகின்றனர். மத்திய அரசு செய்வது தமிழின விரோத நடவடிக்கை, இதை வன்மையாக கண்டிப்பதாகவும், இதற்கு எதிரான மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும் சுப.உதயகுமார் கூறியுள்ளார்….

You may also like

Leave a Comment

twenty − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi