நெல்லை : நெல்லை டவுன் கால்வாயில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளால் ஏற்படும் சுகாதாரக்கேடுகளை சீர்செய்து கால்வாயை தூர்வார வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுநீர் சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து பிரிந்து நெல்லைக் கால்வாயின் மூலம் திருவேங்கடநாதபுரம், குன்னத்தூர், சொக்கட்டான்தோப்பு, டவுன் கல்லணை தெரு, தெற்கு மவுண்ட்ரோடு, குளப்பிறை தெரு, வ.உ.சி.தெரு வழியாக சென்று மீனாட்சிபுரம் அருகே மீண்டும் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. நெல்லை கால்வாயின் கிளை கால்வாய் டவுன் கல்லணைத் தெருவில் இருந்து பிரிந்து சேரன்மகாதேவி ரோடு, பெரியதெரு, லாலா சத்திரமுக்கு வழியாக சென்று நயினார்குளம் வடக்கு மவுண்ட் ரோட்டில் உள்ள பாலத்தின் வழியாக ஓடி நயினார்குளத்திற்கு செல்கிறது. நெல்லை கால்வாயின் தொடக்கம் முதல் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் குவிந்துள்ளதால் நீரோட்டம் பாதிக்கப்படுகிறது. டவுன் சேரன்மகாதேவி ரோட்டில் வெற்றிவிநாயகர் கோயில் அருகே கால்வாயில் பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டுக்கழிவுப் பொருட்கள் அதிகளவு தேங்கிக் கிடப்பதோடு கழிவுநீரும் அதிகளவு கலக்கிறது. இப்பகுதியில் செடி, கொடிகள், மரங்கள் அதிகளவில் வளர்ந்து நீரோட்டத்தை தடுக்கிறது. இதேபோல் டவுன் குளப்பிறை தெரு, நயினார்குளம் வடக்கு மவுண்ட்ரோடு பகுதியில் உள்ள கால்வாயிலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் குவிந்துள்ளதோடு, கழிவுநீரும் கலக்கிறது. இதனால் இப்பகுதிகளில் கொசுக்கள், ஈக்கள் அதிகமாகி சுகாதார பிரச்னைகள் ஏற்படுகிறது. கழிவுப் பொருட்கள் கால்வாயில் குவிந்து கிடப்பதால் நீரோட்டம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து டவுன் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது, ”30 ஆண்டுகளுக்கு முன்புவரை டவுன் பகுதிகளின் வழியே சென்ற நெல்லை கால்வாயின் மூலம் இப்பகுதி மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகள், விவசாயத்துக்கு தண்ணீர் கிடைத்தது. நகர்ப்புற வளர்ச்சியால் குடியிருப்புகள், கடைகள் அதிகரிக்கத் தொடங்கியதோடு, சுற்றுப்புறங்களில் இருந்த விளைநிலங்களின் அளவும் குறைந்துவிட்டது. கால்வாயில் வீட்டுக்கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கலப்பதும் அதிகமானது.காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால் கால்வாய் சுருங்கி பல இடங்களில் மக்கள் பயன்படுத்தி வந்த படித்துறைகள் காணாமல் போய் தற்போது கழிவு நீரோடை போன்று மாறிவிட்டது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்களால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. எனவே இக்கால்வாயில் கழிவுநீர், கழிவுப் பொருட்கள் கலப்பதை தடுக்கவும் கால்வாயை தூர்வாரி ஆழப்படுத்துவதோடு, ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….