நெல்லிக்குப்பம் அருகே குளத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றம்

நெல்லிக்குப்பம், ஜூலை 8: நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு ஊராட்சி கருப்பு கேட் பகுதியில் கடலூர் -பண்ருட்டி சாலையில் பேருந்து நிறுத்தம் பின்புறம் குமலன்குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையோரத்தில் கருப்பு கேட் பேருந்து நிறுத்தத்தின் அருகில் சாலை ஓரத்தில் நீர் நிலைக்கு சொந்தமான இடத்தை அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வந்தனர். தற்போது நீர்நிலைகளில் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில் துறை சார்ந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பலமுறை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான இழப்பீடுகளும் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டது.

மேலும் பல ஆண்டுகளாக அந்த இடத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வந்ததால் அவர்களுக்கு மாற்று இடம் தர அரசு முடிவு செய்து திருவந்திபுரம் அருகில் மாவட்டிபாளையம் பகுதியில் இலவச மனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர்களுக்கு இரண்டு மாதம் கால அவகாசம் தந்த நிலையில் நேற்று துறை சார்ந்த அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். ஆனால் அதற்கு முன்னதாக ஆக்கிரமிப்பாளர்கள் 6 பேரும் தங்களது வீடுகளுக்கு மேல் அமைக்கப்பட்டு இருந்த கூரைகள் மற்றும் கீத்துகளை தாங்களாகவே அகற்றினர். பின்னர் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர், வரக்கால்பட்டு ஊராட்சி செயலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் கான்கிரீட் கட்டைகள் உடைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்