பழநி, நவ. 4: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பழநி ரயில்வே பீடர் சாலையில் போக்குவரத்து போலீசார் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் ஜவுளி கடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளில் வியாபாரம் களைகட்ட துவங்கியுள்ளது.
பழநி ரயில்வே பீடர் சாலையில் அதிகளவில் துணி கடைகள், நகை கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், இனிப்பு கடைகள் போன்றவை உள்ளன. இதனால் இச்சாலையில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். வாகனங்கள் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படும்.
இதனை சீர்செய்யும் நடவடிக்கையில் தற்போது போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் இச்சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து சாலையின் இருபுறமும் மஞ்சள் கயிறுகளை கட்டினர். அந்த கயிறை தாண்டி டூவீலர்கள் சாலையில் நிறுத்தக்கூடாதென அந்தந்த கடைக்காரர்களிடம் அறிவுறுத்தினர். தொடர்ந்து கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர். போலீசாரின் இந்நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.