Friday, July 12, 2024
Home » நெருக்கடியில் தவிக்கும் தி.பள்ளி பேருந்து நிலையம்-நவீன வசதிகளுடன் இடமாற்றப்படுமா?

நெருக்கடியில் தவிக்கும் தி.பள்ளி பேருந்து நிலையம்-நவீன வசதிகளுடன் இடமாற்றப்படுமா?

by kannappan

*இது உங்க ஏரியாதிருக்காட்டுப்பள்ளி : திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பேருந்து நிலையம் இட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலை காணப்படுகிறது. இதனை சீர்படுத்த பேருந்து நிலையத்தை வேறு விரிவான இடத்தில் நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே 28 கி.மீ தூரத்தில் திருச்சி மாநகரமும், கிழக்கே 28 கி.மீ தூரத்தில் தஞ்சை மாநகரமும் அமைந்துள்ளன. தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாக பூண்டிமாதா கோயில், கல்லணை, அகரப்பேட்டை, தோகூர் பகுதிகளுக்கும், திருச்சி, லால்குடியிலிருந்து செங்கிப்பட்டி, தஞ்சை, திருவையாறு பகுதிகளுக்கும், புதுக்கோட்டையிருந்து பூண்டிமாதா கோயிலுக்கும், கும்பகோணத்திலிருந்து கல்லணை பகுதிகளுக்கும் தினசரி நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பேருந்து நிலையம் தற்போது உள்ள ஜன பெருக்கத்திற்கு ஏற்ப நவீன வசதிகள் போதுமானதாக இல்லை. மேலும் உள் கிராமங்களுக்கு செல்லும் மினி பஸ்களும் இப்பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதால் கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.திருச்சி மாவட்டம் செங்கரையூர் – தஞ்சை மாவட்டம் பூண்டி இடையே கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கடந்த 2010ல் திறக்கப்பட்டது. இதனால் திருக்காட்டுப்பள்ளிக்கு திருச்சி மாவட்ட மக்களின் வருகையால் பேருந்துகளும் அதிகரித்தது. காவிரி ஆற்றின் குறுக்கே பூண்டி – திருக்காட்டுப்பள்ளி சாலைகளை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கடந்த 2014ல் திறக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் போக்குவரத்து அதிகமானதால் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் ஏற்படும் இட நெருக்கடியில் தினசரி வாகனங்கள் சிக்கி பல மணிநேரம் போக்கு வரத்து தடைபட்டு வருகிறது. பேரூராட்சிக்கு வருமானம் வருவதால் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் கடைகள் அமைக்க விடப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் கடைகள் அதிகமாக உள்ளதால் பயணிகள் உட்கார போதுமான இருக்கைகள் இல்லை. பயணிகள் பயன்பாட்டிற்கு சுகாதாரமான கழிப்பிடங்கள், சுகாதாரமான குடிநீர் வசதிகள் போதுமானதாக இல்லை.திருக்காட்டுப்பள்ளி நகருக்குள் வராமல் செல்ல வேண்டிய வாகனங்கள் செல்ல சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை ஏற்று பழமார்நேரி சாலை காவிரி புதுப்பாலத்திலிருந்து பூதலூர் சாலைக்கும், அங்கிருந்து கண்டியூர் சாலைக்கும் சுற்றுச்சாலை அமைக்க அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து நில எடுப்பு பணிகள் நடந்தன. இரு ஆண்டுக்கும் மேலாகியும் பணிகள் தொடர்ச்சியாக நடக்கவில்லை. சுற்றுச்சாலை பணிகள் ஏன் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றும் தெரியவில்லை.தற்போது கல்லணை சாலை – திருவானக்கோயில் சாலைகளை இணைக்கும் வகையில் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் போக்குவரத்துக்காக புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இப்பாலம் திறக்கப்பட்டால் திருச்சியிலிருந்து நேரடியாக கூடுதல் பேருந்துகள் திருக்காட்டுப்பள்ளிக்கு இயக்கப்படும்.இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளி கடைவீதி மற்றும் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டு வாகனங்கள் சிக்கி தவிக்கும் நிலைதான் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு காவிரி ஆற்று புதுப்பாலத்திற்கு கிழக்கில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் விரிவான பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்று முன்னாள் திருவையாறு எம்எல்ஏ ரெத்தினசாமி கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் மூலமாக அரசுக்கும் அனுப்பினார்.இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. அங்கு புதிய, நவீன வசதிகளுடன் விரிவான பேருந்து நிலையம் கட்டப்பட்டால் கடைவீதியில் போக்குவரத்து தடைகளும் நீங்கும். பயணிகளுக்கு உட்கார இடம், சுகாதாரமான குடிநீர், கழிகவறை வசதிகளும் கிடைக்கும். மக்கள் நலன் கருதி அரசு இதனை கவனிக்குமா? பொருத்திருந்து பார்ப்போம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்….

You may also like

Leave a Comment

eight + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi