நெடுங்கல் தடுப்பணை மதகுகளில் நீர்க்கசிவு: மதகுகளை மாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்நெடுங்கல் தடுப்பணை மதகுகளில் நீர்க்கசிவு: மதகுகளை மாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி: நெடுங்கல் தடுப்பணையின் மதகுகளில் தொடர்ந்து நீர்க்கசிவு ஏற்பட்டு வருவதால், அதனை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் பகுதியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 1887-89ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது.  கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் திறந்து விடப்படும் உபரிநீர் மற்றும் நெடுங்கல், காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழையே இத்தடுப்பணைக்கு நீர் ஆதாரமாகும். இந்த தடுப்பணை மூலம் சுற்றுவட்டாரத்திலுள்ள, 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் தடுப்பணை நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக பாரூர் ஏரிக்கும், மழைகாலங்களில் உபரிநீர் பெனுகொண்டாபுரத்திலிருந்து கல்லாவி வழியாக ஊத்தங்கரைக்கும், மற்றொரு கால்வாய் வழியாக பாம்பாறு அணைக்கு இணைப்பும் கொடுக்கப்பட்டு 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.134 ஆண்டு பழமை வாய்ந்த இந்த தடுப்பணையின் மதகுகளை மாற்ற நீண்ட கோரிக்கைக்கு பின்னர், புதிய மதகு அமைக்கும் பணி நடந்தது. இப்பணியை கடந்த ஓராண்டாக செய்து வருவதாகவும், தயார் செய்யப்பட்டுள்ள புதிய மதகுகள் அதே பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு துருப்பிடித்து விட்டதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தடுப்பணையின் மதகுகள் சிதிலமடைந்து நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் தடுப்பணையில் தேக்கப்பட்ட நீர் அனைத்தும் வெளியேறிவிட்டதாகவும், தற்போது தென்மேற்கு பருவமழையும் துவங்கியுள்ள நிலையில் உடனடியாக புதிய மதகுகளை அமைத்தால் தான் நீரை தேக்கி, வரும் காலங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும் எனவும் கூறினர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது தொடர் மழை பெய்து வருவதாலும், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் உடனடியாக மதகுகளை மாற்ற முடியவில்லை. இன்னும், 15 நாட்களில் புதிய மதகு அமைக்கும் பணி தொடங்கும்,’ என்றனர்….

Related posts

சென்னையில் வரும் ஜூலை 7-ம் தேதி மகளிருக்கான கார் பேரணி!

சிதம்பரம் அருகே உள்ள பள்ளியில் மதிய உணவு அருந்திய 25 மாணவர்களுக்கு லேசான மயக்கம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவை ஆதரிக்கக் கூடாது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்