Saturday, July 6, 2024
Home » நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 4 ஆயிரம் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் ஸ்டிரைக்

நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 4 ஆயிரம் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் ஸ்டிரைக்

by kannappan

ஈரோடு :  ஈரோட்டில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து 4 ஆயிரம் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், ரூ.50 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் ஜவுளிகளை உற்பத்தி செய்த விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, மாதம் ஒரு முறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், காட்டனை அத்தியாவசிய பட்டியலில் கொண்டு வரக்கோரி கோரிக்கை விடுத்தும் வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். அதன்படி, மாவட்டம் முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்களும், அதனை சார்ந்த நிறுவனங்களும் என என 4 ஆயிரம் நிறுவனங்கள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. இதில், ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதி, திருவேங்கடசாமி வீதி, பெருமாள் கோவில் வீதிகளில் செயல்படும் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்ததால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் அப்பகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. இந்த போராட்டத்தில் ஈரோடு கனிமார்க்கெட் (ஜவுளி சந்தை) வியாபாரிகளும் பங்கேற்றதால், சந்தையில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கலைசெல்வன் கூறியதாவது:   கடந்த 2 ஆண்டுகளில், பஞ்சு விலை ஒரு கண்டி எனப்படும், 356 கிலோ, ரூ.43 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.1 லட்சம் வரை விற்பனையாகிறது. பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த பல்வேறு ஜவுளி சார்ந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இறக்குமதி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்று, இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது. பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு, ஒட்டு மொத்த ஜவுளி தொழிலுக்கு மிகப்பெரிய நெருக்கடியாகவும், தொழில் அழியும் அபாயத்துக்கு கொண்டு செல்கிறது. இந்த தொழிலை காப்பாற்றும் நோக்கத்தில், பஞ்சு, நூல் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காட்டன் நூலை அத்தியாவசிய பட்டியலை கொண்டு வந்து நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் விலையை மாதம் ஒரு முறை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும், அதனை சார்ந்த நிறுவனங்களும் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். இந்த போராட்டத்தின் காரணமாக ரூ.50 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்களது போராட்டத்தில் வெள்ளகோவில், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்று ஒரு நாள் உற்பத்தியை நிறுத்தினர். இவ்வாறு அவர் கூறினார்….

You may also like

Leave a Comment

thirteen − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi