சென்னை: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெறுகிறது. இந்நிலையில் அதற்கு முன்னதாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில்; மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பேரூராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என சுதர்சனம் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு; உடனடியாக செய்யமுடியாது; உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்; அதன் அடிப்படையில் பணிகளை விரைந்து தொடங்க உள்ளோம். நூறு நாள் வேலை திட்டம் இல்லையென்பதால் மாநகராட்சியுடன் இணைய பேரூராட்சிகள் விரும்புவதில்லை இவ்வாறு கூறினார். சோழவரம் ஊராட்சியில் நிதி ஆதாரங்கள் இல்லாததால் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்பட முடியாத சூழல் உள்ளதாக எம்.எல்.ஏ குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு; சோழவரம் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதற்கு அப்பகுதி மக்கள் ஒத்துழைக்கவில்லை. சோழவரம் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். வேலூர் மாவாட்டத்தில் ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்ற அத்தொகுதி எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்தார். குழு அமைத்து மறு ஆய்வு செய்து ஒன்றியங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள் அதிகப்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார். …