Monday, July 1, 2024
Home » நீலாங்கரையில் 3 பங்களா வீடுகளில் கைவரிசை சொகுசு காரில் வந்து கொள்ளை 2 வடமாநில ஆசாமிகள் கைது: மனைவி ஊராட்சி தலைவியாக இருக்கும் கிராமத்தில் நல்லது செய்ய திருடியது அம்பலம்

நீலாங்கரையில் 3 பங்களா வீடுகளில் கைவரிசை சொகுசு காரில் வந்து கொள்ளை 2 வடமாநில ஆசாமிகள் கைது: மனைவி ஊராட்சி தலைவியாக இருக்கும் கிராமத்தில் நல்லது செய்ய திருடியது அம்பலம்

by kannappan

துரைப்பாக்கம்: நீலாங்கரையில் அடுத்தடுத்து 3 பங்களா வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவத்தில், சொகுசு காரில் வந்து கொள்ளையடித்த 2 வடமாநில ஆசாமிகள் பிடிபட்டனர். இதில் மனைவி ஊராட்சி தலைவராக இருக்கும் கிராமத்தில் நல்லது  செய்வதற்காக முக்கிய குற்றவாளி திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரையில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், பிரபல தொழிலதிபர்கள் என ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி நள்ளிரவில் நீலாங்கரை, புளூ பீச் சாலை, கேஷ்சுரினா டிரைவ் பகுதிகளில் காரில் வந்த 3 பேர், தொழிலதிபர்களின் வீடுகளுக்குள் ஆயுதங்களோடு சென்று கொள்ளையடித்துச் சென்றனர். முக்கிய பிரபலங்கள் வசிக்கும் பகுதியில் அதிகளவு பாதுகாப்பு பணியில் பலர் ஈடுபட்டிருந்தாலும் துணிச்சலாக இரவில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்துவிட்டு சொகுசு காரில் அந்த கும்பல் வெளி மாநிலங்களுக்கு தப்பிச் சென்றுவிட்டது. இவர்கள் தோல் தொழிற்சாலை உரிமையாளர் வீடு, டிவிஎஸ் குழும உரிமையாளர் வீடு உள்பட 3 வி.ஐ.பி வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளனர். தோல் தொழிற்சாலை நடத்தி வரும் நாயர் சுல்தான் (45), தனது வீட்டில் பணம் மற்றும் பொருளை கொள்ளையடித்து சென்றதாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை ஆய்வாளர் மகேஷ்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் திருஞானம் உள்ளிட்ட காவலர்களை கொண்ட தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதில் பதிவான காட்சியை பார்த்து அதிர்ந்து போயினர்.காரணம், கொள்ளையடிக்க வந்தவர்கள், விலை உயர்ந்த சொகுசு காரான ஜாக்குவார் காரில் வந்து கொள்ளையடிக்கும் முன்பு நன்றாக நோட்டமிட்டு, பின்னர் இரவு நேரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளுக்குள் புகுந்துள்ளனர். சிசிடிவி காட்சியில் பதிவான காரின் பதிவு எண்ணை எடுத்து, முகவரியை சோதனை செய்தபோது அது போலி என தெரியவந்தது. பின்னர் ஒவ்வொரு சிசிடிவியாக பார்த்துச் சென்று, திருவள்ளூர் அருகே சோழவரம் டோல்கேட்டை கடந்தபோது வாகன எண் மாற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த பதிவு எண்ணை வைத்து கொள்ளை கும்பலை தீவிரமாக தேடிய போலீசார், வாகனத்தின் உரிமையாளர் தனபால்சிங் என்பவரை கண்டறிய டெல்லிக்குச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள சுனில் குமார்யாதவ் என்பவருக்கு காரை விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் உத்தரபிரதேசத்திற்கு  தனிப்படையினர் காரில் சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட புனித்குமார் (26) மற்றும் அவரது சகோதரரான ரமேஷ்குமார் யாதவ் (30) ஆகிய இருவரையும் அங்குள்ள போலீசாரின் உதவியுடன் திரைப்பட பாணியில் காரில் துரத்திச் சென்று துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக போலீசார் தெரிவித்தனர். உத்தரபிரதேசம் காசியாபாத்தில் இருந்து சொகுசு காரில் சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளியான பீகாரைச் சேர்ந்த இர்பான் (27) மீது பல்வேறு மாநிலங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்துவரும் இர்பான் மனைவி அங்கு ஊராட்சி மன்ற தலைவராக உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சொகுசு காரில் சென்று சொகுசு பங்களாக்களை குறிவைத்து கொள்ளையடித்து வரும் இர்பான், அவர் மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ள கிராமத்திற்கு பல்வேறு நன்மைகள் செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார், அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான இர்பான் மற்றும் சுனில் குமார் யாதவ் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். நீலாங்கரையில் பூட்டியிருந்த ஒரு வீட்டில் கொள்ளையடிக்க சென்றபோது, பூட்டை உடைக்க முடியாததால் அங்கிருந்த  ஒரு ஜோடி செருப்பு மற்றும் செருப்பு அலமாரியில் இருந்த ஆயிரம் ரூபாயை மட்டும் கொள்ளையடித்து சென்றது விசாரணையில்  தெரியவந்தது.* வசதியானவர்கள் வீடு கூகுள் மூலம் தேர்வுமுக்கிய குற்றவாளியான இர்பான் டெல்லி ஆக்ரா, அஜ்மீர், பஞ்சாப்  மாநிலம் ஜலந்தர், சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு ஆர்.டி, ஜாக்குவார், லேண்ட்ரோவர் போன்ற சொகுசு கார்களில் சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் சுனில்குமார் யாதவ் மீது இரட்டை கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. 2019ம் ஆண்டு முதல் கொலை வழக்கில் சிறையில் இருந்த நிலையில், 2022ம் ஆண்டு கொள்ளை வழக்கில் சிறை சென்ற இர்பானுடன் சுனில்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் இருவரும் ஒன்றிணைந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். பின்னர் கூகுள் மூலம் தமிழகத்தில் வசதி படைத்தவர்கள் உள்ள இடத்தைப் பார்த்து, சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியை தேர்ந்தெடுத்து பின்னர் உத்தரபிரதேசத்தில் இருந்து சொகுசு காரில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு சுனில் குமார் யாதவ், இர்பான், சுனில் குமார் யாதவின் ஓட்டுநர் புனித் குமார் (26) ஆகிய 3 பேரும் கொள்ளையடிக்க வந்துள்ளனர். …

You may also like

Leave a Comment

fourteen + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi