நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குட்டியுடன் யானை கூட்டம் உலா வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லவேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இருந்து சமவெளி பகுதிகளுக்கு செல்ல கூடிய 3-வது பாதையாக மஞ்சூர்-கெத்தை பாதை உள்ளது. இந்த பாதை அடர்ந்த வன பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளதால், யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உலா வருகின்றன. இந்நிலையில், குட்டியுடன் கூடிய 6-க்கும் மேற்பட்ட யானை கூட்டம் தற்போது அந்த பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டமானது தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது சாலையை கடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை அந்த யானை கூட்டம் சாலையில் உலா வந்தது. அப்போது அவ்வழியாக சென்ற அரசு பேருந்தில் இருந்த பயணிகள் அதனை வீடியோவாக பதிவு செய்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்: அடர்ந்த வன பகுதி வழியாக செல்ல கூடிய சாலைகளில் யானைகள் அவ்வப்போது உலா வருகிறது. அதனால் அவ்வழியாக செல்லகூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். …