கோத்தகிரி, செப்.24: கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் வனவிலங்குகள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் சாலையோர முட்புதற்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோத்தகிரியில் உள்ள ராம்சந்த் பகுதி அதிக மக்கள் நடமாடக்கூடிய பகுதி. இந்த பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
மேலும் அப்பகுதியில் இருந்து ரைபிள்ரேஞ், கிளப் ரோடு, மிஷன் காம்பவுண்ட், கால்வாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் நடந்து செல்லக்கூடிய சூழலில், சமீப காலமாக கரடி, காட்டு மாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது.
தற்போது சாலையோரங்களில் முட்புதர்கள் வளர்ந்து உள்ளதால் வனவிலங்குகள் முட்புதர்களில் உலவும் நிலை உள்ளது. எனவே கோத்தகிரி ராம்சந்த் பகுதியை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் சாலையோரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.