திருப்பூர், ஜூன் 11: திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுக்கா நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள அவிநாசி மற்றும் குன்னத்தூர் செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் திருமலைக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் குன்னத்தூர் நீர்வளத்துறை அலுவலகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.
இதற்காக வேலை வாய்ப்பகம் பரிந்துரைக்கும் நபர்கள் தவிர இதர தகுதியுள்ள நபர்கள் தங்களது ஓட்டுனர் உரிமம், வயது சான்று, கல்வி சான்று, சாதி சான்று , குடும்ப அட்டை நகல், ஓட்டுநர் பணியில் 3 ஆண்டு முன் அனுபவ சான்று மற்றும் உடற்பயிற்சி சான்று ஆகியவற்றுடன் அவிநாசி நீர்வளத்துறை சிறப்பு திட்ட வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூலை மாதம் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. பொதுப்பிரிவை சார்ந்த ஒருவரும், பட்டியல் இனத்தவர் ஒருவரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.