பெரியகுளம், அக்.7: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில், நீர்வரத்து சீராக இருந்ததை அடுத்து, வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காகவும், காலாண்டு தேர்வு விடுமுறை முடிவடைதையொட்டியும் நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
இந்நிலையில் அருவியின் மேல் பகுதியில் பெய்த மழையின் காரணமாக, அருவியில் நீர் வரத்து அதிகரித்தது. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து, சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, அருவியில் குளித்துக் கொண்டிருந்த பயணிகளை வனத்துறையினர் உடனடியாக வெளியேற்றினர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகளுக்கான தடை தொடரும் எனவும் தேவதானப்பட்டி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.