வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளிமலை, அரசரடி வனப்பகுதியில் மூலவைகை ஆறு உருவாகிறது. இந்த ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை, அரசரடி, காந்திகிராமம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து தும்மக்குண்டு விவசாயி முத்துராமன் கூறுகையில், ‘வருடம்தோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் மூலவைகை ஆறு வறண்டு கிடக்கும். ஆனால், இந்தாண்டு வைகாசி மாதத்தில் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதன்காரணமாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு இந்த ஆண்டு நீங்கியுள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயமும் செழிப்படையும் என தெரிவித்தனர். இதேபோல கண்டமனூர் கிராமத்தில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஊரைச் சுற்றியுள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பரமசிவன் கோயில் கண்மாயை வந்தடைந்தது. நேற்று பெய்த கனமழையின் காரணமாக பரமசிவன் கோவில் கண்மாயில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….