திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். இதற்கு பதிலளித்து கலெக்டர் பேசும்போது, ‘உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆடுகள், மாடுகளுக்கு காப்பீடு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி அந்தந்த கால்நடை உதவி மருந்தகங்களில் மருத்துவர்களிடம் கேட்டறிந்து கொள்ளலாம். திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிகழாண்டில் கரும்பு அரவை கடந்த 8ம் தேதி தொடங்கி, இதுநாள் வரை 29,502 மெட்ரிக் டன்கள் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலையை நவீனமயமாக்கவும் தேவையான கருத்துரு அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளது.அரசு தோட்ட கலை பண்ணையில் 20 லட்சம் மிளகாய் வீரிய ரக குழித்தட்டு நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. எனவே இயற்கை முறையில் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நாற்றுகளை பெற்று பயனடையலாம்’ என்றார். பின்னர் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து விவசாயிகளிடம் இருந்து 201 மனுக்கள் பெற்றார்….