திருப்போரூர்: களிவந்தப்பட்டு பகுதியில் இருந்து தரமணிக்கு செல்லும் மின் வாரிய உயர் அழுத்த மின் கம்பங்களில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சிங்க பெருமாள் கோயில் மின் வாரிய ஊழியர்கள் சாமுண்டி (42), சிவா (36), கதிர்வேல் (35) ஆகிய மூன்று பேர் கோளாறு எங்கு ஏற்பட்டுள்ளது என்று வயல்வெளிகளில் நடந்தபடி ஆய்வு மேற்கொண்டிருந்தனர். பின்னர் தையூர் ஏரியின் உபரிநீர் செல்லும் கால்வாயில் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது படகு நிலை தடுமாறி கவிழ்ந்ததில் மூவரும் வெள்ள நீரில் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர்.பின்னர் மூவரும் நீச்சல் அடித்துக் கொண்டு கால்வாயின் நடுவில் உள்ள வேப்ப மரக்கிளை ஒன்றை பிடித்துக் கொண்டு கூச்சல் போட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோவிந்தராஜ், எஸ்.ஐ. ராஜா மற்றும் போலீசார் கேளம்பாக்கத்தைச் சேர்ந்த அலைச்சறுக்கு வீரர்களான மூர்த்தி, லிங்கேஷ், சையத், ரஞ்சித் ஆகியோர்களுடன் மற்றொரு படகில் சென்று கால்வாயின் நடுவே சிக்கித்தவித்த மூன்று மின் வாரிய ஊழியர்களையும் மீட்டனர். மின் வாரிய ஊழியர்களை உயிரை பணயம் வைத்து மீட்ட காவல்துறை மற்றும் அலைச்சறுக்கு வீரர்களை பொதுமக்கள் திரண்டு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர். இந்த மீட்பு பணியின் போது திருப்போரூர் வட்டாட்சியர் இராஜன், வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி, வி.ஏ.ஓ. மேகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். …