நீதிமன்ற வழக்குகளில் ஓபிஎஸ் வெற்றி பெற காஞ்சிபுரம் ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம்: அதிமுகவை மீட்டெடுக்கும் நீதிமன்ற வழக்குகளில் ஓபிஎஸ் வெற்றி பெற காஞ்சிபுரம் ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் ஒபிஎஸ் அணி நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு செய்தனர். தமிழகத்தின் எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தினால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் என செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரை தொண்டர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டுமென கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உயர்நீதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவை மீட்டெடுக்கும் அனைத்து நீதிமன்ற வழக்குகளிலும் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, சிவபெருமானுக்கு உகந்த சோமவாரமான நேற்று காஞ்சிபுரத்தில் வழக்குகளை தீர்த்து வைக்கும் கோயில் என பெயர் பெற்று விளங்கும் உலகப் பிரசித்திப் பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் ஓபிஎஸ் அணி அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாட்டின் பேரில் அதிமுக நிர்வாகிகள் வழக்கறுத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு  பிரார்த்தனையில் ஈடுபட்டு  வழிபாடு செய்து வழிபட்டனர். பின்னர், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும், தென்னை மரக்கன்றுகள், அன்னதானங்கள் வழங்கி வேண்டிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், அதிமுக  ஓபிஎஸ் அணி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் அம்மன் பி.வைரமுத்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் நகர செயலாளர் புல்லட் பரிமளம் மற்றும் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்