நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக நகராட்சி மேலாளருக்கு எதிராக கலெக்டரிடம் மனு

விருதுநகர், ஜன. 10: விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்த சக்திவேல், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: விருதுநகர் நகராட்சி பூமாலை வணிக வளாகத்தில் மனைவி பெயரில் வாடகைக்கு உள்ள கடைக்கான வாடகை நிலுவைத்தொகையை 6 வரைவோலைகளாக கடந்த 2018 முதல் 2021 வரை ரூ.2.14 லட்சம் கட்டியுள்ளேன். ஆனால் நகராட்சி நிர்வாகம் இந்த தொகையை வாடகையில் வரவு வைக்கவில்லை.

இதுதொடர்பாக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவர் விசாரணை செய்து செலுத்திய வாடகை நிலுவைத்தொகைக்கான உரிய ரசீதை ஒரு மாத காலத்திற்குள் அளிக்க வேண்டுமென கடந்த 13.9.2023ல் ஆணையிட்டுள்ளது. ஆனால் நகராட்சி அலுவலகம் வரவு வைத்து ரசீது வழங்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் இருந்து வருகிறது.

இது தொடர்பாக கடந்த 3.1.2024ல் நகராட்சி ஆணையரை சந்திக்க சென்றபோது, ஆணையர் இல்லாததால் மேலாளர் மல்லிகாவை சந்தித்து நடுவர் உத்தரவிட்டு 3 மாதம் ஆகியும் ரசீது வழங்கப்படவில்லை என தெரிவித்தேன். அதற்கு மேலாளர் தரக்குறைவாக பேசியதுடன், அந்த இடத்தை விட்டு சென்று விடு இல்லை உன்மீது வழக்கு தொடர்வேன் என தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படும் மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்