தஞ்சாவூர், செப். 13:நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்து 10 வயது மாணவி சாதனை படைத்துள்ளார். தஞ்சாவூரை அடுத்த அருளாநந்தபுரம், நடராஜபுரம் பகுதியை சேர்ந்த நிர்மல் குமார், இலக்கியா தம்பதியினரின் மகள் அனன்நியா (10). இவர் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். நிர்மல் குமார் நீச்சல் பயிற்சியாளராக உள்ளார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார். அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் கடந்த சில தினங்களாக முதலமைச்சர் விளையாட்டு கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.
அதில் கலந்து கொண்ட அனன்நியா 10 வயது ப்ரீ ஸ்டைல், பிரஸ் ஸ்ட்ரோக் போட்டியில் கலந்து கொண்டு 2 முறை முதல் இடத்தை பெற்றுள்ளார். இதேபோல மாநில அளவில் நடைபெற்ற 10 வயதுக்கு உட்பட்ட போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசும், தேசிய அளவில் கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கு பெற்று 3வது பரிசையும் பெற்றுள்ளார். இவர் புனே, கோவா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வெற்றி பெற்ற அனன்நியாவை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், நீச்சல் பயிற்சியாளர் ரஞ்சித் குமார் மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்கள் பாராட்டினர்.