திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் நேற்று தொகுதிக்கு உட்பட்ட திருச்சினாங்குப்பம், திருவொற்றியூர் குப்பம் போன்ற மீனவ கிராமங்களில் பிரசாரம் செய்தார். வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகமிட்டு வெற்றிபெற வாழ்த்தினர். அப்போது மக்கள் மத்தியில் கே.பி.சங்கர் பேசுகையில், ‘மணலி சிபிசிஎல் நிறுவனத்தால் பாதிக்கப்படும் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும், வேலை வாய்ப்பையும் வழங்குவோம் என்று அந்நிறுவன அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் அந்த உறுதி காற்றில் பறந்ததோடு, நியாயமாக கிடைக்க வேண்டிய எதுவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை. நான் வெற்றி பெற்றால் சிபிசிஎல் நிறுவனத்தில் இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு கண்டிப்பாக வேலை வாங்கி தருவதோடு, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள் மற்றும் உதவிகளை பெற்று தருவேன். ஏழ்மையில் படிக்க முடியாமல் சிரமப்படும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பை தொடர நிச்சயம் உதவி செய்வேன். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை தொகுதி மக்களுக்கு பெற்று தருவேன். சாலை, குடிநீர், மின்விளக்கு, கழிவுநீர் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகள் தீர்ப்பேன். அதனால் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்,’ என்றார். இதை கேட்ட மீனவர்களும், பொதுமக்களும் கே.பி.சங்கருக்கு ஆதரவாக கைதட்டி எங்களது ஓட்டு உதயசூரியனுக்கு தான் என்று கோஷமிட்டனர்….