சென்னை: நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. ஜெயக்குமார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. அதனையடுத்து அந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த ஐகோர்ட் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதாவது, அவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள காவல் நிலைத்தில் திங்கட்கிழமை தோறும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டு இருந்தது. இதனை தளர்த்துமாறு ஜெயக்குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஜெயக்குமாரின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட் ஜாமின் நிபந்தனைகள் தளர்வு அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ஜெய்குமாருக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா ஆணையிட்டுள்ளார். …