சென்னை: நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத தனியார் ஆய்வகங்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது.கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும்போது ஆய்வகங்கள் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தனியார் ஆய்வகங்கள் பரிசோதனை முடிவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இணைய தளத்தில் நாள்தோறும் பதிவேற்றம் செய்யவேண்டும். பரிசோதனை முடிவுகளை தவறுதலாக பதிவேற்றம் செய்யக்கூடாது. காலதாமதமாக பதிவேற்றம் செய்வதால் களத்தில் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது பல் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. பரிசோதனைக்கு வரும் நபர்களின் ஆதார் அடையாள அட்டையில் சென்னை மாநகராட்சியை தவிர்த்து பிற மாவட்டங்களின் முகவரி உள்ளவர்களிடம் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் தற்போதைய இருப்பிட முகவரி ஆகியவற்றை சரிபார்த்து பெற வேண்டும். ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியிடும்போது அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் எஸ்ஆர்எப் அடையாள எண் போன்ற தகவல்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். அனைத்து ஆய்வகங்களும் நாள்தோறும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் விவரங்களுடன் சென்னை மாநகராட்சியின் gccpvtlabreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆய்வகங்கள் பரிசோதனை முடிவுகளை காலை, மாலை என இரண்டு தொகுப்புகளாக அனுப்பலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் முடிவுகளை மட்டும் உடனடியாக அவர்களிடம் வழங்கலாம். பரிசோதனை முடிவுகளை வெளியிடும்போது உண்மைத்தன்மையை மட்டுமே வெளியிடவேண்டும். மேற்குறிப்பிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத ஆய்வகங்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது….